Tuesday, October 30, 2012

அஞ்சாதீர்கள் நண்பர்களே, டெங்குவைக் கண்டு!





டெங்கு காய்ச்சல் பற்றிய ஊடகச் செய்திகளைப் பார்க்கும்போது, அந்தக் காய்ச்சலைக் காட்டிலும் இந்தச் செய்திகள்தான் உண்மையான ‘தொற்றுக் கிருமிகள்’ என்ற பதட்டம் ஏற்படுகிறது. டெங்குவால் இதுவரை இறந்தோர் எண்ணிக்கை பல நூறுகளில் உள்ளதாக ஊடகங்களும், எதிர்க்கட்சிகளும், 39 மட்டுமே என அரசுத்தரப்பும் தெரிவிக்கின்றன. ‘டெங்கு நோயாளிகள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று நலமுடன் சென்று கொண்டிருக்கிறார்கள்’ என்றார் முதல்வர்.

நண்பர்களே, நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புவது டெங்குவைப் பற்றி மட்டுமல்ல, நோய்களின் அரசியலைப் பற்றி.

கடந்த 2008 ஆம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட புள்ளிவிவரக் குறிப்புகளின்படி, அந்த ஆண்டில் தமிழகத்தில் மரணமடைந்தோர் எண்ணிக்கை 4,29,981 பேர். அதாவது நாள் ஒன்றுக்கு 1178 பேர், ஒரு மணி நேரத்துக்கு சுமார் 49 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். இது அரசின் கணக்கு. Source: Director of Public Health and Preventive Medicine (Civil Registration System),

உண்மைக் கணக்கு, இதைக்காட்டிலும் கூடுதலாகத்தான் இருக்கும் என்பதில் ஐயம் வேண்டாம். ரேசன் கடையில் அளக்கப்படும் ஒரு கிலோ என்பது உண்மையில் 750 – 900 கிராம்தான் என்பதை அறிந்தவர்கள் அல்லவா நாம்.

இந்தக் கணக்கையே வைத்துக் கொள்வோம். 2012 ஆம் ஆண்டிலும் ஏறத்தாழ ஒரு மணி நேரத்துக்கு 49 பேர் மரணமடைந்து கொண்டுதான் இருப்பார்கள். இவர்கள் எல்லாரும் என்ன நோய் வந்து இறக்கிறார்கள்? இதற்குப் புள்ளி விவரங்கள் தேவையா? கண்களை மூடிக் கொண்டு சிந்தித்தால், நம் உறவு வட்டத்தில் எவர் எவர் என்ன வயதில் என்ன காரணங்களால் இறந்தார்கள் என உணர முடியும். 80 வயது வரை வாழ்ந்து விட்டு, அப்போதும் உயிர் பிரியாமல், வாயில் பால் ஊற்றிய பின்னர் இயற்கை எய்தியோர் எத்தனை பேர் எனக் கணக்கிட்டுப் பாருங்கள்.

என் அனுபவத்தில் என் உதவி இயக்குனர் ஒருவரின் தகப்பனார் மட்டுமே அப்படி முதுமையால் இறந்தார். பிறர், 
1. மாரடைப்பு
2. நீரிழிவு
3. புற்று நோய்
4. சிறுநீரகம் செயலிழப்பு
5. கல்லீரல் செயலிழப்பு
6. நுரையீரல் செயலிழப்பு
7. திடீர் காய்ச்சல் திடீர் மரணம்
8. விபத்து
உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இறந்தார்கள். இந்தக் காரணங்கள் எல்லாமே இவர்களுக்குச் ‘சிகிச்சை’ அளித்த மருத்துவமனைகளால் கூறப்பட்டவையே தவிர. உண்மையிலேயே இவர்கள் எதனால் இறந்தார்கள் என நமக்குத் தெரியாது.

அரசின் கணக்குப்படி, ஒரு மணி நேரத்துக்கு 49 பேர் இம்மாதிரிக் காரணங்களால் இறந்து கொண்டிருக்கின்றனர். டெங்கு பற்றிய பீதி கிளம்பியதிலிருந்து இன்று வரைக்கும் சுமார் 30 நாட்களில், 35,340 பேர் பல்வேறு காரணங்களால் இறந்திருக்கிறார்கள். இந்த ஒரு மாதத்தில், ஊடகக் கணக்கின்படி அதிகபட்சமாக 1000 பேர்கள் டெங்குவால் இறந்ததாகவே வைத்துக் கொள்வோம். மீதம், 34,340 பேர் இறந்துபோனது எந்த நோயினால்?

அரசு கணக்கின்படியே, வெறும் 39 பேர் டெங்குவால் இறந்ததாகக் கொண்டால், மீதம் 34,301 பேர் எதனால் இறந்தார்கள்?

டெங்குதான் அபாயகரமான நோய் என்றால், ஒரு மணி நேரத்துக்கு சுமார் 1000 உயிர்களைப் பலி வாங்கும் பிற நோய்கள் எல்லாம் எந்த வகை நோய்கள்?

இந்தக் கேள்விகள், இவர்களைக் குற்றம் சுமத்தும் நோக்கில் எழுப்பவில்லை நண்பர்களே. அதனால் ஆகப் போவது ஒன்றுமில்லை.

நமக்குள் பகிர்ந்து கொள்ள வேண்டிய சில செய்திகளுக்கு அடிப்படையாக இக்கேள்விகள் எழுகின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்னால், பறவைக்காய்ச்சல் எனும் நோயை அரசும் ஊடகங்களும் அறிமுகப்படுத்தின. கோழிப் பண்ணைகளில் ப்ராய்லர் கோழிகள் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்பட்டன. அப்படிக் கொல்லாவிட்டால், அந்தக் கோழிகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டு, மேலும் சேதம் ஆகும் எனச் சொல்லப்பட்டது. கோழிகளின் காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவும் என்றும், இக்காய்ச்சல் உயிர்க் கொல்லி நோய் என்றும் எச்சரிக்கப்பட்டது. சென்னை போன்ற பெரு நகரங்களில் பலர் முகமூடி அணிந்துகொண்டு உலா வந்ததை நீங்களும் நினைவில் கொண்டிருக்கலாம். அவ்வாறு முகமூடி அணியாவிட்டால், காற்றில் கிருமிகள் பரவி சுவாசம் வழியே நுரையீரலைத் தாக்கிக் கொன்றுவிடும் என விளம்பரப்படுத்தப்பட்டது.

உண்மையிலேயே பறவைக் காய்ச்சல் தாக்கி இறந்த கோழிகளின் எண்ணிக்கையை விட, ’முன் எச்சரிக்கை’ என்ற பெயரில் பண்ணை பண்ணையாகக் கொல்லப்பட்ட கோழிகளின் எண்ணிக்கை பல லட்சம் அதிகம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

பின்னர், பன்றிக் காய்ச்சல் நமக்கு மரண பயத்தை ஊட்டியது. அதன் பின்னர் சிக்கன் குன்யா நம்மை மரணத்தின் வாசலைக் காட்டி அழைத்து வந்தது. இப்போது மீண்டும் டெங்கு!

ஒரு நோய் உருவாகிறது என்றால், அதற்குரிய மருத்துவத்தைச் செய்ய வேண்டியது மருத்துவத்துறையின் பணி. அந்த நோய் பன்றியால் வருவதா, கொசுவால் வருவதா என ஆய்வு செய்ய வேண்டியதும் அத்துறையின் கடமைதான். இப்படி ஒரு நோய் உருவாகியுள்ளது எனும் தகவல் பொதுச் சமூகத்தில் பரப்பப்படுவதற்கான தேவை என்ன?

பல ஆயிரம் நோய்கள் மனிதர்களுக்கு வருகின்றன. மரணமடையும் மனிதர்களில் பெரும்பாலானோர் ஏதோ ஒரு நோய் தாக்கித்தான் இறக்கிறார்கள். 

சில வகைக் காய்ச்சல்களை மட்டும் ஊதி ஊதிப் பெரிதாக்கி பீதியடையச் செய்வதற்குப் பின்னால், கொலைகாரப் பொருளாதாரச் சதிகள் இருப்பதை நாம் உணர வேண்டும் என்பது என் விருப்பம்.

டெங்குவைப் பற்றிய அபாய அறிவிப்புகள் ஏன்? எனக் கேட்டால், ‘அது மிகவும் ஆபத்தானது. உயிரைப் பறிக்கக் கூடியது’ என்கிறார்கள்.

‘ஏன் உங்களிடம் டெங்குவை குணப்படுத்துவதற்கான மருந்துகள் இல்லையா?’

‘இருக்கின்றன. ஆனால், அக்காய்ச்சலை உரிய நேரத்தில் கண்டறிய வேண்டும். அதனால்தான் எச்சரிக்கிறோம்’

’பொதுவாக எந்தக் காய்ச்சல் வந்தாலுமே மக்கள் உடனடியாகவே மருத்துவரைப் பார்க்கிறார்களே. இதற்கு என்ன அவ்வளவு அவசரம்?’

’டெங்கு ஒரு நாள் தாமதித்தாலும் உயிரைப் பறித்துவிடும். அதனால்தான்’

இவ்வாறான பதில்களை மருத்துவத்துறை வாரி வழங்குகிறது. மக்கள் நலனில் இவ்வளவு அன்பும் அக்கறையும் கொண்ட மருத்துவத் துறை இருக்கும்போது நமக்கென்ன கவலை என்று நிம்மதியாக இருக்க வேண்டிய சமூகம் எதற்காகத்தான் டெங்குவைக் கண்டு பதற வேண்டும்?
ஏன் மக்கள் பதற்றமடைகிறார்கள் என்றால், நோய்களைக் காட்டிலும் மோசமாக உயிரைப் பறிக்கக் கூடியவை இந்த மருத்துவமனைகள் என்பதால்தான்.

’டெங்குவை குணப்படுத்த மருந்து உண்டா இல்லையா?’ என்ற கேள்விக்கு அதிகாரப்பூர்வ பதில் என்ன?

‘டெங்குவைக் கட்டுப்படுத்த மருந்துகள் உள்ளன’ என்பதே அரசுத்தரப்பில் கூறப்படுகிறது. ‘கட்டுப்படுத்துவது, குணப்படுத்துவது’ ஆகிய இரு சொற்களுக்கும் இடையே பெரும் இடைவெளி உள்ளது. 

‘டெங்கு காய்ச்சல் வந்தால், இரத்ததில் வெள்ளைத் தட்டுகள் குறைந்து போகின்றன. அதாவது, உடலின் நோய்த் தடுப்பு, எதிர்ப்பு ஆற்றல் குறைகிறது. மருத்துவமனைகளில், அந்த நோயாளிக்கு வெள்ளைத் தட்டுகள் அதிகரிப்பதற்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. வெண் தட்டுகளின் எண்ணிக்கை சீரான நிலைக்கு வந்த பின்னர், நோயாளி வீடு திரும்பலாம். ஆனாலும், சில நாட்களுக்கு ஓய்வில் இருக்க வேண்டும். அதன் பின்னர் அவருக்கு நலம் கிட்டும்’ என்பதுதான் மருத்துவத்துறையும் அரசும் கூறும் ‘கட்டுப்படுத்தும்’ முறை.

குணப்படுத்தல் என்பது, ‘குறிப்பிட்ட மருந்தை உட்கொண்டால், டெங்கு முற்றிலும் ஒழியும். உங்கள் உடல் நலம் சீரடையும்’ என்பது. இவ்வாறான, உறுதி மருத்துவத்துறையினால் வழங்கப்படவில்லை. ஆனால், டெங்குவை குணப்படுத்துகிறோம் என்பது போன்ற பாசாங்கு அவர்களால் வெற்றிகரமாக செய்யப்படுகிறது. மருத்துவமனைகளில் மழையிலும் புயலிலும் அலைமோதும் பொதுமக்களுக்கு, தங்கள் உயிரை, தம் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றும் கடவுளராக மருத்துவர்கள் தோற்றமளிக்கிறார்கள். ஆனால், இவர்களிடம் நோயைக் குணப்படுத்தும் மருந்தே இல்லை என்பது அவர்களுக்குத் தெரியாது.

’டெங்கு காய்ச்சல் என்பது வைரஸ் கிருமியினால் உருவாவது. ஆகவே, இதை முற்றிலும் ஒழித்து, நோயைத் தீர்க்கும் மருந்துகள் இல்லை. டெங்குவிற்கான சிகிச்சை என்பது முற்றிலும் நோய்க் குறியீடுகளை சீராக்குவதே தவிர, நோயைக் குணப்படுத்துவது அல்ல’ என்கிறார் மருத்துவர் ஜான் கும்ஹா (www.medicinenet.com/dengue)

இதையேதான் தமிழக மருத்துவத்துறையினரும் பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இப்படி வெளிப்படையாக அறிவிப்பதில்லை. அறிவித்தால், கடவுள்களாகக் காட்சியளிக்கும் மருத்துவர்கள் பிசாசுகளாக, பணம் பிடுங்கும் கொள்ளையர்களாகக் காட்சி தருவார்கள்.

காய்ச்சல் வந்தாலே, அது டெங்குவாக இருக்குமோ என்ற அச்சம் மக்களிடம் பரவிவிட்டது. மருத்துவமனைகளுக்கு ஓடுகிறார்கள். டெங்கு பரிசோதனைக்கு சில ஆயிரங்கள் பிடுங்கப்படுகின்றன.

பொதுவாகவே ஆங்கில மருத்துவம், நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதே இல்லை. அது வெறும் ‘அறிகுறி மருத்துவம்’தான். அதாவது, காய்ச்சல் என்பது நோய் அல்ல, அறிகுறி. உடலின் ஏதோ ஓர் உறுப்பில் நோய் ஏற்பட்டுள்ளது என உணர்த்தும் அறிகுறிதான் காய்ச்சல், தலைவலி, உடல் வலி, வாந்தி, மயக்கம், சோர்வு உள்ளிட்டவை. ஆங்கில மருத்துவம் இந்த அறிகுறிகளை நிறுத்தும். நோயைத் தீர்ப்பதில்லை.

ஆங்கில மருந்துகளை உட்கொண்டபடி சில நாட்கள் ஓய்வில் இருந்தால், நோய் கட்டுப்படும். உண்மையில், நோயை மருந்து தீர்க்கவே இல்லை. மாறாக, ஓய்வு வழங்கப்பட்டதால், உடலின் இயற்கை ஆற்றல் நோயைக் கட்டுப்படுத்துகிறது அல்லது தீர்க்கிறது. 

ஆங்கில மருந்துகள் உடலின் இயற்கை ஆற்றலையும் அழிக்கும் தன்மையுடையவை. இதைத்தான் பொதுவாக ‘பக்க விளைவுகள்’ என்கிறோம். ஆனால், இவை பக்க விளைவுகள் அல்ல, நேரடி விளைவுகள். தொடர்ந்து ஆங்கில மருந்துகள் உட்கொண்டால், உடலின் நோய் எதிர்ப்பாற்றல் அழிகிறது. இந்த நிலையில் ஏதேனும் நோய் தாக்கினால், ஆங்கில மருத்துவம் செயல்படவே இயலாத நிலைக்கு உடல் தள்ளப்படுகிறது. விளைவாக, மரணம் நேரிடுகிறது.

ஆங்கில மருத்துவம் வெறும் இவ்வாறான ’மாறுபாடான’ முறை, என்பதைக் கேலியாக குறிப்பிடத்தான் அதற்கு ‘அலோபதி (allopathy)’ எனப் பெயரிட்டனர். Allo என்ற சொல்லின் வேர்ச் சொல் லத்தீன் சொல்லான ’அல்லோஸ்’ என்பதிலிருந்து உருவானது. ‘வேறுபாடான’ என்று இதற்கு அர்த்தம். ’வேறுபாடான / மாறுபாடான / மற்றதற்கான (different / other) சிகிச்சை’ என்பதே அலோபதி. இப்பெயரை இட்டவர் ஹோமியோபதியின் தந்தையான சாமுவேல் ஹானமென். 

டெங்கு காய்ச்சலைப் பொறுத்தவரையில், இது மேலுமொரு கொள்ளைக்கான வாய்ப்பை ஆங்கில மருத்துவமனைகளுக்கும் மருத்துவர்களுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் வாரி வழங்கியுள்ளது.

எனது அனுபவத்திலிருந்து சில செய்திகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

அடிப்படையில், நம் உடலில் எல்லாவித நோய்களையும் தடுக்கும், எதிர்க்கும், அழிக்கும் ஆற்றல் உள்ளது. இந்த ஆற்றலை நமக்கு இயற்கையின் பேராற்றல் வழங்கியுள்ளது. பல்லாயிரம் கோடி உயிரணுக்களில் ஒரே ஒரு உயிரணுவாக நீங்களும் நானும் தெரிவு செய்யப்பட்டு கருவறைக்குள் வளர்ந்தது மருந்துகளால் அல்ல. இயற்கையின் பேராற்றலால். 

நம் உடலில் ஏதேனும் நோய் அறிகுறிகள் இருந்தால், உடல் சொல்வதை அமைதியாகக் கேளுங்கள். அமைதியாக உணருங்கள். பசியில்லை, வாய் கசக்கிறது என்றால், வாந்தி வருவது போல் இருக்கிறது என்றால், உடலில் எங்கோ நோய்க் குறி இருக்கிறது. இந்த நேரத்தில் உங்கள் உடலால் உணவைச் செரிக்க முடியாது என்று பொருள். இந்த உணர்வு மாறும் வரை, எதையும் உண்ணாதீர்கள். உணவே இல்லாமல் இருக்கிறேனே எனக் கவலைப்பட வேண்டாம். நம் உடல் இயக்கத்துக்கான ஆற்றல், நம் உணவில் இருந்து மட்டும் பெறப்படவில்லை. காற்றிலிருந்தும், ஒளியிலிருந்தும் கூட ஆற்றலைப் பெற்றுத்தான் உடல் வளர்கிறது, இயங்குகிறது.

பொதுவாக மூன்று நாட்களில் உடல் தன்னைத்தானே சீராக்கிக் கொள்கிறது. மீண்டும் பசி எடுக்கும்போது உணவு உட் கொள்ளலாம். அதுவரை உண்ணாதிருப்பதால் நன்மைகள் நடக்குமே தவிர, தீமைகள் அல்ல.

எனக்கு ஆண்டுக்கொரு முறை மஞ்சள் காமாலை வந்ததுண்டு. தொடர்ந்து நான்கு ஆண்டுகள் இப்படி. 2005 ஆம் ஆண்டு மஞ்சள் காமாலை வந்தபோது, மூன்று நாட்கள் எதையும் உண்ணாமல் நீர் அருந்தாமல் படுக்கையில் இருந்தேன். மருந்தில்லா மருத்துவம் என்ற இந்த முறையை எனக்கு மரு.கனகசபாபதி அறிமுகப்படுத்தி சிகிச்சை அளித்தார்.

இன்றுவரை, எனக்கு எந்த உடல் சிக்கலும் இல்லை. நான் மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சை பெறுவதே இல்லை என்பதை என் நண்பர்கள் அறிவார்கள். உடல் என்ன உணர்த்துகிறதோ அதைக் கேட்டு நடக்கும்போது, நோய் என்ற எதுவும் வருவதில்லை என்பது என் அனுபவம். என் நண்பர்கள் பலரும் இம்முறையில்தான் நோயின்றி வாழ்கிறார்கள்.

கடந்த மாதம், டெங்கு பீதி பரவியபோது எனக்குக் கடுமையான காய்ச்சல், உடல் வலி, தலை வலி ஏற்பட்டது. வழக்கம் போல, படுத்துக் கொண்டேன். ஒரே நாளில் காய்ச்சல், இரண்டாம் நாள் வலி நின்றது. உடல் சோர்வு மட்டும் மேலும் 5 நாட்கள் நீடித்தது. உடலுக்கு அந்த ஓய்வு தேவை என்பதால் அத்தனை நாட்களை அது எடுத்துக் கொண்டது. எனக்கு வந்தது என்ன காய்ச்சல் என அறிந்து கொள்ள விரும்பவில்லை. என்ன காய்ச்சலாக இருந்தாலும் மருத்துவமனைகளில் அதற்கான மருந்துகள் இல்லை. அவர்கள் கொடுக்கும் மருந்துகள் எனக்கு செயற்கையாகப் பசி கொடுக்கும், என் தலைவலியை மரத்துப் போகச் செய்து, உடலுக்கு ஒவ்வாத வேலைகளில் ஈடுபடச் செய்யும், என் உணவை என் உடல் செரிக்காது, மருந்துகள் செரிக்கும்.

ஆக, என் நோயை நான் உணர முடியாது. என் நோயை என் உடல் சீர் செய்ய இயலாது. மருந்துகளே செய்யும். அதுவும் நோயை இம்மருந்துகள் குணப்படுத்தாது. நோய்க் குறிகளை மாற்றிவிடும். இது போதாதென, இந்தக் காய்ச்சலுக்கு ஏதேனும் பெயர் வைத்துவிடுவார்கள். மருந்துகள் இல்லையென்றாலும் நோய்களுக்குப் பெயர் வைப்பதில் இவர்கள் கில்லாடிகள். என் உடல் என்னிடம் கேட்ட ஓய்வை நான் வழங்கினேன். என் உடலின் இயற்கை ஆற்றல் என்னை மூன்றாம் நாளே, ஆற்றில் நீந்த வைத்தது. தஞ்சாவூர் புது ஆற்றில் மாலை 6 மணி முதல் 7 மணி வரை நீந்திக் களித்தேன். இது வழக்கமானதுதான்.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஒரு போராட்டத்தில் நேர்ந்த தீ விபத்தில் என் இடது கால், கணுக்கால் வரை எரிந்தது. அவசர சிகிச்சைக்குச் சென்றபோது தீக்காயம் 40% இருப்பதாகவும் 6 மாதங்கள் சிகிச்சைக்குப் பின்னர், ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்தால்தான் தீக்காயத்தின் தழும்புகளை மறைக்க இயலும் என்றும் சொன்னார்கள்.

எந்த மருத்துவமனை சிகிச்சையையையும் நாடாமல், எந்த மருந்தும் இல்லாமல், 15 நாட்களில் தடி ஊன்றி நடந்தேன். ஒரு மாதத்தில் தடி இல்லாமல் நடந்தேன். என் இரு கால்களில் எந்தக் கால் தீக்காயம் பட்டது என எவராலும் கண்டுபிடிக்க இயலாத அளவுக்கு இடது காலில் புத்தம் புது தோல் வளர்ந்துவிட்டது. நான் செய்ததெல்லாம், நன்னீரில் காலை வைத்து வைத்து எடுத்ததும், உணவில் சில முறைகளைக் கடைப்பிடித்ததும்தான். தீக்காயத்திற்கு நீர் ஆகாது என்பார்கள். என்னை நலமாக்கியதே நீர்தான்., மருந்தல்ல.

இவையெல்லாம் சில அனுபவங்கள்.

ஆகவே, நோயைக் கண்டு அஞ்சாதீர்கள். எந்த நோயையும் உங்கள் உடல் தாங்கும். உங்கள் நோய்களைத் தீர்க்கும் மருந்துகள் உங்கள் உடலுக்கு உள்ளே இருக்கின்றன. உடலைக் காட்டிலும் மேலானது மனம்தான். மனம் தெளிவாக, உறுதியாக, நம்பிக்கையுடன், நலமாக வேண்டும் என்ற விருப்பத்துடன் இருக்கும்வரை, உங்கள் உடல் அதிவிரைவாக நலமடையும்.

‘LIMITS OF MEDICINE’ எனும் நூல் GOLUB என்ற ஆங்கில மருத்துவ முனைவரால் எழுதப்பட்டது. ஆங்கில மருத்துவ முறையின் மருந்துகள் மட்டுமே நோய்களைத் தீர்ப்பதில்லை என்பதை இந்நூலில் அவர் விளக்கியுள்ளார். கொள்ளை நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டது, மருந்துகளால் மட்டும் அல்ல. மாறாக, மக்களது வாழ்க்கை நிலையில் ஏற்பட்ட முன்னேற்றங்களால் என்கிறார் அவர். 

இன்றைய அரசும் ஊடகங்களும் மருத்துவத்துறையும் போடும் கூச்சல்களுக்குப் பின்னால், அரசியல், பொருளாதாரம் ஆகியவையே உள்ளன. நமது உடல்நலம் மீதான அக்கறை துளியும் இல்லை.

மலேரியா காய்ச்சல் ஒரு காலத்தில் உயிர்க் கொல்லி நோயாகக் கூறப்பட்டது. இப்போது, மலேரியாவைக் கட்டுப்படுத்திவிட்டதாகச் சொல்கிறார்கள். கீழேயுள்ள செய்தியைப் படியுங்கள்.
’’ At least 299 people have died due to malaria and 19 others due to dengue across the country so far this year, the health ministry said Tuesday.After a meeting of health authorities under the chairmanship of R.K. Srivastava, director general of health services (DGHS), on the vector-borne disease situation in the country, authorities here said: “Till Aug 31, 15 states have recorded a total of 1,495 cases and 19 deaths due to dengue.” (2008)

ஏற்கனவே ’கட்டுப்படுத்தப்பட்ட’ மலேரியாவால் 299 பேர் மரணமடைந்தார்களாம். புதிதாக வந்த டெங்குவால் 19 பேர் இறந்தார்களாம்!. இது 2008 ஆம் ஆண்டு கதை.

இந்த ஆங்கில மருத்துவமனைகள் வெறும் ‘பரிசோதனைக் கூடங்களை’ (laboratories) மட்டுமே நடத்தத் தகுதியானவை. என்ன நோய் எனப் பெயரிடுவார்கள். ஆனால், நோயைத் தீர்க்க மருந்துகள் இவர்களிடம் இல்லை. 

சர்க்கரை நோய்க்கு ஆங்கில மருந்துகளை உட்கொண்டால், ஆயுள் முழுக்க மருந்துக்கு அடிமையாக வேண்டியதுதான். கேட்டால், ‘சர்க்கரையைக் கட்டுப்படுத்தியிருக்கிறோம்’ என்பார்கள். ரத்தக் கொதிப்பு, புற்று நோய், இதய அடைப்பு என சகல நோய்களுக்கும் இதே பதிலை அவர்கள் தருவதை நீங்களும் பார்க்கிறீர்கள்தானே.

எனது கேள்வி மிக எளிமையானது,

‘டெங்குக் காய்ச்சலை குணப்படுத்தும் மருந்து இல்லை’ என வெளிப்படையாக அறிவிக்க ஆங்கில மருத்துவத்துறை தயாரா? மருந்து உண்டு என்றால், ‘ஆம் இதுதான் டெங்குவை குணப்படுத்தும் மருந்து’ என்றாவது அறிவிக்கட்டும்.

வெகுதாமதமாக, மக்களின் பணம் கோடிகளில் பறிபோனபின்னர், எண்ணற்ற உயிர்கள் பலியான பின்னர், அரசு அறிவிக்கிறது, ‘டெங்கு காய்ச்சல் வந்தால் நிலவேம்பு எனும் நாட்டு மருந்து உட்கொள்ளுங்கள்’ என.

நிலவேம்பு தமிழர்களின் மூதாதையர் கண்டறிந்த அற்புதமான மூலிகை. இதன் வேர், மருத்துவ ஆற்றல் உடையது. சிக்கன் குன்யா தாக்குதல் கட்டுக்கடங்காமல் போனபோதும் அரசு, ‘நிலவேம்பு காய்ச்சி அருந்துங்கள்’ என அறிவித்தது. என் அனுபவத்தில், 10 ரூபாய்க்கு நிலவேம்பு வேர் வாங்கி நீரில் காய்ச்சி மூன்று நாட்கள் குடித்தால் காய்ச்சல் முற்றிலும் குணமாகும். அது சிக்கன் குன்யாவா பன்றிக் காய்ச்சலா அல்லது டெங்குவா எனப் பெயர் வைக்கும் தொல்லை இல்லை.

இப்போது மக்களில் சிலர் நிலவேம்புவைத் தேடி அலைகிறார்கள். ஆனால் அரசு என்ன செய்ய வேண்டும்?

நிலவேம்பு மருந்தை அல்லவா மருத்துவமனைகளில் வழங்க வேண்டும்! ஓமியோபதியில் டெங்குவைக் குணப்படுத்தும் மருந்துகள் உள்ளன. சித்த மருத்துவத்தில் மருந்துகள் உண்டு. இம்மருத்துவ முறைகள் எல்லாம், இயற்கையின் பேராற்றலை உணர்ந்து வடிவமைக்கப்பட்டவை. ஆகவே, உடலின் ஆற்றலைத் தூண்டி, நோய்களை குணப்படுத்தும் வழிமுறைகள் இவற்றில் உள்ளன.

ஆங்கில மருத்துவமோ, இயற்கையின் பேராற்றலுடன் முரண்படுவது. உடலின் ஆற்றலை அழித்து வெறும் மருந்துகளால் மனிதரை இயங்கச் செய்வது. 

நாம், எல்லோரும் இயற்கையின் பிள்ளைகள்தானே தவிர, மருந்துகளின் பிள்ளைகள் அல்ல என்பதை மறக்க வேண்டாம்.

உங்களுக்கோ, உங்கள் பிள்ளைகளுக்கோ காய்ச்சல் என்றால், முதலில் செய்ய வேண்டியது – அஞ்சாமல் இருப்பதுதான்.

உங்கள் அச்சம் உங்கள் மனதைக் கெடுக்கிறது. உங்கள் மனம் கெட்டால், அறிவு கெடுகிறது. அறிவு கெட்ட பின்னர், ஆங்கில மருத்துவமனைகள் கோயில்களாகக் காட்சியளிக்கும். 

இயற்கையோடு முரண்படாத, அனுபவம் வாய்ந்த, மரபுவழிப்பட்ட மருத்துவர்களைச் சந்தியுங்கள். பதட்டமடையாதீர்கள். நலமடைய வேண்டும் எனும் விருப்பமும், நலம் கிடைக்கும் எனும் நம்பிக்கையுமே நம்மைக் காப்பாற்றும். மருந்துகள் துணை செய்யும் கருவிகள் மட்டுமே. அவையே அனைத்தையும் சாதிப்பதில்லை.

அப்படி சாதிக்கும் வல்லமை மருந்துகளுக்கு இருந்தால், ஒரு மணி நேரத்துக்கு 1000 மரணங்கள் நிகழ்வது எதனால் எனச் சிந்தியுங்கள். மாதம் ஒன்றுக்கு 34,340 பேர், டெங்கு அல்லாத பிற காரணங்களால் இறக்கிறார்களே இவர்கள் எதனால் இறக்கிறார்கள் எனக் கேளுங்கள். இந்த மரணங்களைத் தடுக்கும் மருந்துகள் ஏன் மருத்துவமனைகளில் இல்லை எனக் கேளுங்கள்.

அஞ்சாதீர்கள் நண்பர்களே. முடிந்தால், செய்திகளைப் பார்த்து உங்கள் நோய்களைத் தீர்மானிக்காமல் இருங்கள். உங்கள் உடலின் நிலையை, எந்த சேனலும், அமைச்சரும், மருத்துவ நிபுணரும் தீர்மானிப்பதில்லை. உங்கள் உடலின் நலம் உங்கள் மனதில் உள்ளது. நோய்களைத் தீர்க்கும் வல்லமை இயற்கையின் பேராற்றலை உணர்ந்த நம் மரபில் உள்ளது.